தமிழக பள்ளிகளில் நவ.3வது வாரத்தில் நீட் பயிற்சி வகுப்புகள் – பள்ளிக் கல்வி ஆணையர் அறிவிப்பு!
தமிழகத்தில் உள்ள அரசு பள்ளிகளில் பயிலும் மாணவ மாணவிகளுக்கு நீட் உள்ளிட்ட நுழைவு தேர்வுகளில் தேர்ச்சி பெற இலவச பயிற்சி வகுப்பு நவ. 3வது வாரத்தில் தொடங்கும் என பள்ளிக் கல்வி ஆணையர் அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.
நீட் பயிற்சி:
தமிழக அரசின் கீழ் ஏராளமான பள்ளிகள் இயங்கி வருகின்றன. அரசு பள்ளிகளில் பயிலும் மாணவர்கள் தனியார் பள்ளிகளுக்கு நிகரான தரத்துடன் இருக்க வேண்டும் என்பதால், அதற்காக அரசு பல நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அந்த வகையில் மருத்துவ படிப்புகளில் அரசு பள்ளி மாணவர்கள் பங்களிப்பு இருக்க வேண்டும் என்பதால் அரசு சார்பில், பள்ளிகளில் இலவச நீட் பயிற்சி வகுப்புகள் நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.
இந்த ஆண்டுக்கான நீட் தேர்வு பயிற்சி வகுப்புகள் இன்னும் தொடங்கப்படாமல் இருக்கும் நிலையில் அது குறித்த அறிவிப்பை பள்ளிக்கல்வித்துறை ஆணையர் வெளியிட்டுள்ளார். அதன் படி, தமிழக அரசு பள்ளிகளில் 11 ஆம் வகுப்பு மற்றும் 12 ஆம் வகுப்பு பயிலும் மாணவர்களுக்கு நவம்பர் மூன்றாம் வாரத்தில் இலவச ‘நீட்’ பயிற்சி வகுப்புகள் துவங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் பள்ளிகளில் ஒவ்வொரு சனிக்கிழமையும் நீட் தேர்வு பயிற்சிகள் நடத்தப்படும் எனவும், தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் இதற்காக ஒரு ஒன்றியத்துக்கு தலா ஒரு மையம் என, 412 பயிற்சி மையங்கள் ஏற்கனவே அமைக்கப்பட்டுள்ளன. மேலும் மாணவர்களுக்கு தமிழ் மற்றும் ஆங்கில வழியில் தனித்தனியே பயிற்சி அளிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அது மட்டுமில்லாமல் தற்போது 12 ஆம் வகுப்பு படிக்கும் மாணவர்கள், 11ஆம் வகுப்பில் பெற்ற மதிப்பெண் அடிப்படையிலும், 11ஆம் வகுப்பு மாணவர்கள், 10 ஆம் வகுப்பில் பெற்ற மதிப்பெண் அடிப்படையிலும், பயிற்சிக்கு தேர்வு செய்யப்பட இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த பயிற்சியில் 12ஆம் வகுப்பில் ஒரு ஒன்றியத்துக்கு, 50 மாணவர்களும், 11 ஆம் வகுப்பில் ஒரு ஒன்றியத்துக்கு 20 மாணவர்களும் தேர்வு செய்யப்பட்டு பயிற்சி வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.